பயணிகளுக்கு 5 பில்லியன் திர்ஹம்ஸ் தொகையை ரீஃபண்ட் செய்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!! கொரோனா எதிரொலி..!!
கொரோனாவின் பாதிப்பால் விதிக்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து காரணங்களால் துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 பில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான தொகையை ரீஃபண்ட் (Refund) செய்திருப்பதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனமானது நிலுவையில் இருந்த 90 சதவீத ரீஃபண்ட் கோரிக்கைகளை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் செலுத்துவதற்கான உறுதிப்பாட்டில் வலுவான மற்றும் நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறது என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கையில் மார்ச் மாதத்திலிருந்து ஜூன் இறுதி வரை உலகெங்கிலும் உள்ள 1.4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ரீஃபண்ட் கோரிக்கைகள் செயலாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 90 சதவீத அளவிலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் டிம் கிளார்க் கூறுகையில், “உலகளாவிய தொற்று நோயின் பாதிப்பால் விதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்த வேண்டிய ரீஃபண்ட் தொகையை வழங்கி வருகிறோம்”.
“இதில் பலருக்கு விரைவாகவே ரீஃபண்ட் தொகை கிடைத்து விடுகிறது. ஆனால், சிலருக்கு எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் மதிப்பாய்வு தேவைப்படுவதால், அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் புரிந்துணர்தலுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ட்ராவல் ஏஜெண்டுகளின் மூலம் விமான முன்பதிவு செய்த பயணிகளின் கட்டணத்தை எளிதில் திருப்பி செலுத்த தங்களின் பங்குதாரர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.