அமீரக செய்திகள்

DXB-2022: ஒரே மாதத்தில் 7 மில்லியன் பயணிகள்.. ஓராண்டில் 66 மில்லியன் பயணிகள்.. ஆச்சரியப்படுத்திய துபாய் ஏர்போர்ட்..!!

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகளின் போக்குவரத்து இருமடங்கு அதிகரித்து 66 மில்லியனைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில், 2023ம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 78 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆண்டுக்கு 127 சதவீத வளர்ச்சியுடன் 2022 இல் மொத்தம் 66,069,981 பயணிகளை DXB வரவேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டுமே பயணிகளின் போக்குவரத்து 7 மில்லியனைத் தாண்டி மிகவும் பிஸியான மாதமாக பதிவாகியுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 67% அதிகரித்து, 19,729,155 பயணிகளை விமான நிலையம் பதிவு செய்தது மட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகவும் பிஸியான காலாண்டாகவும் பெயரெடுத்துள்ளது. அத்துடன் டிசம்பர் மாதம் 7.1 மில்லியன் பயணிகளை கையாண்டதைத் தொடர்ந்து ஜனவரி 2020க்குப் பிறகு முதல் முறையாக DXBயின் மாதாந்திர போக்குவரத்து 7 மில்லியனை எட்டியது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 96,701 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன எனவும் இதன் மூலம் ஆண்டில் மொத்தம் 343,339 விமான இயக்கங்கள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 47 சதவீத வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 204 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இது ஒவ்வொரு ஆண்டும் சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் ஏர்போர்ட்ஸ்-யின் CEO, பால் கிரிஃபித்ஸ் அவர்கள் கூறுகையில், 2022இல் விமானத் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் எனவும், ஆனால், இந்த வளர்ச்சியின் அளவானது நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் வலுவாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது” என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், விமான நிலைய உறுப்பினர்களின் திட்டமிடல், தயாரிப்பு, ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளை, விமான நிலைய சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குவதற்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் விரைவாக இலக்கை எட்ட சவாலை எதிர்கொள்வதற்கும் எங்கள் குழு தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல, துபாய் அதன் வருடாந்திர ஏர்ஷோ மற்றும் COP28 உள்ளிட்ட முக்கிய சர்வதேச நிகழ்வுகளை இந்த ஆண்டும் நடத்த உள்ள நிலையில், 2023 ம் ஆண்டு விமான நிலையத்திற்கு மற்றொரு சாதனை ஆண்டாக இருக்கும் என்று கிரிஃபித்ஸ் கூறியுள்ளார். இது புதிய வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கான மற்றொரு ஆண்டாக அமையும் என்றும், அவற்றுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்கோ

2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், 614,834 டன்களுடன் ஒப்பிடுகையில் விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 31.7 சதவீதம் குறைந்து 420,125 டன்கள் கார்கோ அளவு இருந்ததும் தரவுகளில் பதிவாகியுள்ளன. மேலும், அனைத்து முக்கிய கார்கோ ஆபரேட்டர்களும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) க்கு திருப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் pax-freighter விமானங்கள் மீண்டும் பயணிகள் நடவடிக்கைகளுக்கு திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், 2023 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் முதன்மையான முன்னுரிமை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்று கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!