ஓமான்: மஸ்கட், சென்னை இடையே நாளை முதல் சிறப்பு விமான சேவைகளை இயக்கும் இண்டிகோ நிறுவனம்..!!
ஓமானில் சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கும் ஓமானிற்கும் இடையே ‘ஏர் பபுள்’ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கும் ஓமானிற்கும் சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் இந்தியா, ஓமான் இடையே சிறப்பு விமான சேவைகளை நவம்பர் 30 ம் தேதி வரை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிற்கு சொந்தமான விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியா மற்றும் ஓமான் இடையே விமான சேவைகளை நாளை முதல் (அக்டோபர் 7) இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் ஓமானில் இருக்கக்கூடிய மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவின் சென்னை, டெல்லி, லக்னோ, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் இந்தியாவில் இருந்து ஓமான் வரும் பயணிகள் மஸ்கட் விமான நிலையத்திற்கு வந்தவுடன் கட்டாய PCR சோதனைக்கு படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.