UAE: துபாய் பயணிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ள எமிரேட்ஸ் நிறுவனம்..!!
துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் துபாய்க்கு வரும், துபாயில் இருந்து செல்லும் மற்றும் துபாய் வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ளது. அனைத்து சுற்றுலாவாசிகளும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து புறப்படும் சுற்றுலாப் பயணிகள்
பயணிகள் புறப்படுவதற்கு முன் கொரோனாவிற்கான PCR சோதனைகளை அவர்கள் செல்ல வேண்டிய நாட்டில் கட்டாயம் தேவைப்பட்டால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
விதிமுறைகள் அடிக்கடி மாறுவதால் பயணிகள் தாங்கள் பயணிக்கும் நாட்டின் விதிமுறைகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புறப்படுவதற்கு முன் ஒரு PCR சோதனை தேவைப்படலாம் அல்லது செல்ல வேண்டிய நாட்டைப் பொறுத்து மற்றொரு கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.
எமிரேட்ஸ் அனைத்து பயணிகளுக்கும் பிரத்தியேகமாக பயணிகளின் வீடு அல்லது அலுவலகம் சென்று PCR சோதனை மேற்கொள்ளும் வசதியை பின்வரும் மையங்களில் வழங்குகிறது
1.அல் ததாவி மருத்துவ மையம் (Al Tadawi medical center)
இங்கு கொரோனா சோதனைக்காக ஒரு நபருக்கு 130 திர்ஹம் செலவாகும். துபாயில் வீடு அல்லது அலுவலகம் சென்று சோதனை மேற்கொள்ள ஒரு நபருக்கு 240 திர்ஹம் செலவாகும். சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும்.
2. துபாயில் உள்ள அனைத்து முதன்மை மருத்துவ மையங்கள் (All prime medical center in dubai)
இங்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஒரு நபருக்கு 150 திர்ஹம் செலவாகும். துபாய்க்குள் குறைந்தபட்சம் இரண்டு பயணிகளுக்கு வீடு அல்லது அலுவலக சோதனை மேற்கொள்ள ஒரு நபருக்கு 240 திர்ஹமில் கிடைக்கிறது. சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும்.
துபாய் செல்லும் சுற்றுலாப் பயணிகள்
பயணிகள் தாங்கள் புறப்படும் நாட்டைப் பொறுத்து, அரைவல் விசாவைப் (arrival visa) பெறலாம் அல்லது பயணம் செய்வதற்கு முன்னர் துபாய் இமிகிரேஷனில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர உலகின் வேறு எந்த நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டாலும் பயணிகள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (PCR) சோதனையாக மட்டுமே இருக்க வேண்டும். ஆன்டிபாடி சோதனைகள் மற்றும் வீட்டு சோதனை கருவிகள் உள்ளிட்ட பிற சோதனை சான்றிதழ்கள் துபாயில் ஏற்றுக்கொள்ளப்படாது.
அதேபோல் பயணிகள் அதிகாரப்பூர்வ சான்றிதழை ஆங்கிலம் அல்லது அரபியில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வர வேண்டும். Sms மற்றும் டிஜிட்டல் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
PCR சோதனை சான்றிதழ்கள் பயணிகள் புறப்படும் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
வேறொரு இடத்திற்கு பயணிப்பதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருந்தாலும்கூட மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, சோதனை அறிக்கையில் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக அசல் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட QR குறியீடு இருப்பது கட்டாயமாகும்.
இந்தியா, குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மற்றொரு PCR பரிசோதனையை விமான நிலையம் வந்தடைந்தவுடன் மேற்கொள்ள வேண்டும்.
துபாய் வழியாக பயணம் செய்பவர்கள்
ஆப்கானிஸ்தான் அல்லது இந்தோனேசியாவில் தங்கள் பயணத்தைத் தொடங்கி துபாய் வழியாகச் செல்லும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட சோதனைக்கு எதிர்மறையான PCR சோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சோதனை சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும்.
பின்வரும் நாடுகளிலிருந்து துபாய் வழியாக பயணிக்கும் பயணிகள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை சான்றிதழை வழங்க வேண்டும். அத்துடன் அவர்கள் செல்ல வேண்டிய இறுதி இலக்கைப் பொறுத்து கொரோனாவிற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
(அவை: அங்கோலா, அர்ஜென்டினா, பஹ்ரைன் , போஸ்னியா & ஹெர்சகோவினா, பிரேசில், கம்போடியா, சிலி, குரோஷியா, சைப்ரஸ், ஜிபூட்டி, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஜார்ஜியா, கானா, கினியா, ஹங்கேரி, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஐவரி கோஸ்ட், ஜோர்டான், கென்யா, குவைத், கிர்கிஸ்தான், லெபனான் மால்டா, மால்டோவா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமான், போலந்து, பிலிப்பைன்ஸ், கத்தார், ருவாண்டா, ரஷ்யா, செனகல், ஸ்லோவாக்கியா, சோமாலிலாந்து, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தஜிகிஸ்தான், தான்சானியா, துனிசியா, துருக்கி, துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே)
மற்ற அனைத்து நாடுகளிலிருந்தும் துபாய் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய இறுதி நாட்டில் PCR சோதனை சான்றிதழ் தேவைப்பட்டால் ஒழிய துபாயில் PCR சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை.
PCR சோதனைக்கு விலக்கு அளிக்கப்படும் பிரிவினர்:
துபாய்க்கு புறப்படுவதற்கு முன்னர் PCR சோதனை செய்வதிலிருந்து ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் விலக்கு பெற்றுள்ளனர். அவர்கள் துபாய் வந்ததும் சோதனை செய்யப்படுவார்கள்.
12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மிதமான மற்றும் கடுமையான இயலாமை உடையோர்களுக்கு PCR பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மிதமான அல்லது கடுமையான இயலாமையில் நரம்பியல் கோளாறுகள் மற்றும் அறிவுசார் அல்லது வளர்ச்சி குறைபாடுகள் ஆகியவை அடங்கும்.
இவர்கள் தவிர பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் அல்லது உடல் ரீதியான பாதிப்பு உள்ளவர்கள் உட்பட மற்ற அனைத்து பயணிகளும் தேவைகளுக்கு ஏற்ப எதிர்மறை PCR சோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
கோவிட் 19 சோதனை ஆய்வகங்கள்
PCR சோதனைகளை ஐக்கிய அரபு அமீரக அரசு அங்கீகரித்துள்ள ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஆய்வகப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகங்கள் அல்லது தங்கள் PCR பரிசோதனையைப் பெற தங்கள் சொந்த நாட்டில் உள்ள நம்பகமான மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களைப் பயன்படுத்தலாம்.
வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள்
துபாய் வந்தவுடன் பயணிகள் மற்றொரு PCR சோதனை எடுக்க வேண்டியிருக்கலாம். விமான நிலையத்தில் ஒரு சோதனை எடுத்தால், அவர்கள் சோதனை முடிவைப் பெறும் வரை ஹோட்டல் அல்லது இல்லத்திலேயே இருக்க வேண்டும்.
சோதனை முடிவு நேர்மறையானதாக இருந்தால், பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு துபாய் சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
மேலும், பயணிகள் COVID19 – DXB ஸ்மார்ட் அப்ளிகேஷனையும் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.