அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டு கொண்டாட்டங்களில் இந்த விதிமுறைகளை மீறினால் 50,000 திர்ஹம் அபராதம்..!! துபாயின் பேரிடர் மேலாண்மைக்குழு அறிவிப்பு..!!

நடப்பு ஆண்டான 2020 முடிவடைய ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், வரவிருக்கும் புதிய ஆண்டை நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பமாகக் கொண்டாட நினைக்கலாம். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், உங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக சுகாதார அமைப்புகளில் (WHO) உள்ள சுகாதார அதிகாரிகள் கோடிட்டுக் காட்டிய கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிக அவசியம் என்று அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான உச்சக் குழு துபாயில் உள்ள மக்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் நபர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதனை பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு தனியார் விருந்து நிகழ்வில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச நபர்கள்

இந்த அறிவிப்பின்படி, கூடாரங்கள் மற்றும் வீடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடும்ப நிகழ்வுகள் அல்லது சமூக கூட்டங்களுக்கு அதிகபட்சம் 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், நான்கு சதுர மீட்டர் இடத்திற்கு ஒரு நபர் என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக தூரத்தை எப்போதும் பராமரிக்க வேண்டும்

புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் நிகழ்வுகளில் அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கலந்துகொள்ளும் அனைவரும் எப்போதும் முக கவசத்தை அணிந்துகொண்டு, எல்லா நேரங்களிலும் குறைந்தது இரண்டு மீட்டர் தூரத்தில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது

முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடும் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இருமல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

கடுமையான அபராதங்கள்

துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான உச்சக் குழு அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், புத்தாண்டு நிகழ்வின் ஏற்பாட்டாளர் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • விதிகளை மீறும் தனியார் சமூக கூட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் மற்றும்
  • விதிகளை மீறும் தனியார் சமூக கூட்டத்தில் அல்லது பார்ட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 15,000 திர்ஹம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை

தனியார் சமூகக் கூட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் இணக்கத்தை உறுதி செய்வதற்காக ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் உச்சக் குழு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!