UAE: ஒரே நாளில் 3 எரிபொருள் டேங்கர் வெடிப்பு.. ஏர்போர்ட்டிலும் தீ விபத்து.. அபுதாபியில் என்ன நடந்தது..??
அபுதாபியில் திங்கள்கிழமை காலை இரண்டு பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்துக்கள் ட்ரோன்கள் மூலம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
அதில் ஒன்றாக அபுதாபியின் முசாஃபாவில் மூன்று எரிபொருள் டேங்கர்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. டேங்கர்கள் ADNOC இன் சேமிப்பு பகுதிக்கு அருகில் உள்ள ICAD 3 பகுதியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று டேங்கர்களும் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவதாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டுமானப் பகுதியில் மேலும் ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த இரண்டு தீ விபத்துகளுக்கும் ட்ரோன்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு பறக்கும் பொருட்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் விழுந்ததாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், “திறமையான அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டு, தற்போது தீ அணைக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணையை தற்பொழுது தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Wam