100% திறனில் இயங்கவிருக்கும் துபாய் விமான நிலையம்.. பயணிகள் மகிழ்ச்சி..
துபாய் விமான நிலையமானது துபாய் இன்டர்நேஷனல் டெர்மினல் 3 வளாகத்தில் கான்கோர்ஸ் A ஐ புதன்கிழமை பிற்பகல் மீண்டும் திறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் தனது 100 சதவீத செயல்பாட்டுத் திறனை நெருங்கியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 20 மாதங்களுக்கு முன்பு மார்ச் 25, 2020 அன்று இந்த பகுதி மூடப்பட்டது. தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ள Concourse A பகுதிக்கு வந்த முதல் விமானம் மாலி நாட்டிலிருந்து வந்த EK659 விமானமாகும்.
கான்கோர்ஸ் A, வரும் வாரங்களில் பல்வேறு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும் என்றும், இது டிசம்பர் மற்றும் அதற்குப் பிறகான பருவகாலப் பயணிகளின் அதிகரித்த போக்குவரத்துக்கு இடமளிக்கும் அதே வேளையில் சேவை நிலைகளைப் பராமரிக்க துபாய் விமான நிலையத்திற்கு உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்கோர்ஸ் A, டெர்மினல் 3 உடன் விமான நிலைய மெட்ரோ மூலம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஆண்டுதோறும் 18 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டது.
ஆண்டு முழுவதும் பயணிகள் போக்குவரத்தில் வலுவான வளர்ச்சி மற்றும் இறுதி காலாண்டில் அதிகரித்துள்ள பயணிகளின் போக்குவரத்தின் காரணமாக இந்த பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.