துபாய்: மூன்று ஆண்டுகளுக்கு நிலையான வாடகை கட்டணம்..!! அமலுக்கு வரவிருக்கும் புதிய வாடகை ஒப்பந்த சட்டம்..!!
துபாயில் வாடகைக்கு குடியிருக்கும் குத்தகைதாரர்கள் (tenants) மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு (property owners) இடையேயான வாடகை ஒப்பந்தம் (rental agreement contract), ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் துபாயில் முன்மொழியப்பட்டிருப்பதாக அரபு நாளேடான அல் பயான் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
துபாய் லேண்ட் டிபார்ட்மென்ட் (Dubai Land Departmen – DLD) இயக்குநர் ஜெனரல் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கான நிரந்தர வாடகைக்கு வகைசெய்யும் இந்த புதிய சட்டம், குத்தகைதாரர் வாடகை ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட தேதியிலிருந்து பொருந்தும் என இயக்குநர் ஜெனரல் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிலையான வாடகை கட்டணம் என்பது துபாயில் இருக்கக்கூடிய குத்தகைதாரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த புதிய சட்டத்தின் வரைவு 2019 ஆம் ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.