UAE: அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து.. 11 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!!
அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து குறித்த தகவலை அறிந்த சிவில் பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்துள்ளனர்.
அஜ்மான் காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அஜ்மான் எமிரேட்டின் அல் ரஷிதியா பகுதியில் உள்ள பேர்ல் குடியிருப்பு வளாகத்தின் இருக்கும் டவர்களில் ஒரு டவரில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அஜ்மான் போலீஸ் கமாண்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுஐமியின் முன்னிலையிலும் மேற்பார்வையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்ததாக கூறப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் அந்த கட்டிடத்தில் உள்ளவர்கள் வெளியேற உதவி புரிந்ததாகவும் தீ முழுவதுமாக அணைத்த பிறகு விபத்து நடந்த இடத்தில் குளிரூட்டும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திடீரென ஏற்பட்ட தீ பல அபார்ட்மெண்ட்டுகளுக்கு பரவியது என்றும் இதன் விளைவாக ஏற்பட்ட புகை காரணமாக ஒன்பது பேருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இரண்டு பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேருக்கும் ஆம்புலன்ஸ் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இன்று அதிகாலை அஜ்மானின் தொழில்துறை பகுதியில் இருக்கும் ஒரு எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தினால் அந்த தொழிற்சாலை மட்டுமல்லாது அதற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடமும் பல வாகனங்களும் தீக்கிரையாகியது. அத்துடன் இந்த தீவிபத்தினால் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.