சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்த மூன்றாவது வளைகுடா நாடு..!! ஜனவரி வரையிலும் தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில், குவைத் அரசும் முதலில் UK-உடனான நேரடி விமானப் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சவூதி அரேபியா மற்றும் ஓமான் போன்ற வளைகுடா நாடுகள் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மூடுவதாக தற்பொழுது அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது குவைத் அரசும் தனது எல்லைகளை மூடி, அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்திற்கும் இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. குவைத் அமைச்சரவை அறிவித்துள்ளதன்படி, இத்தடையானது இன்று (திங்கள்கிழமை) இரவு 11 முதல் ஜனவரி 1 வெள்ளிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து மற்ற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடும் மூன்றாவது வளைகுடா நாடாக குவைத் உள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பல்வேறு நாடுகள் விதித்து வரும் பயணக்கட்டுப்பாடுகளை பின்பற்றி குவைத் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.