UAE: பயண தடை உள்ள நாடுகளிலிருந்து எட்டு வகை பிரிவினர் அமீரகத்தில் நுழைய அரசு அனுமதி..!! கட்டுப்பாடுகள் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகம் வர தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து எட்டு வகையான பயணிகள் தற்போது அமீரகத்திற்குள் நுழைய அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பின்படி, அமீரகம் வர அனுமதிக்கப்பட்டவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் உட்பட கடுமையான கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அமீரக அரசின் இந்த புதிய வகை பிரிவுகளில் கூடுதலாக எக்ஸ்போ 2020 துபாய் பங்கேற்பாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் நுழைவு அமீரக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) வெளியிட்டுள்ள சமீபத்திய பாதுகாப்பு சுற்றறிக்கையின்படி, பயண தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட எட்டு பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் மற்றும் அவர்களின் முதல் நிலை உறவினர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் தடை அமலில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான அரசாங்க தூதர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள்.
முன் ஒப்புதல் பெற்று வரக்கூடிய அதிகாரப்பூர்வ அரசாங்க பிரதிநிதிகள்.
எக்ஸ்போ 2020 சர்வதேச பங்கேற்பாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் மற்றும் அதன் அமைப்பாளரால் வழங்கப்படும் பணியாளர்கள்.
ஐக்கிய அரபு அமீரக அரசால் வழங்கப்பட்ட கோல்டன் விசா மற்றும் சில்வர் விசா பெற்ற குடியிருப்பாளர்கள்.
வெளிநாட்டு நிறுவனங்களின் சரக்கு மற்றும் ட்ரான்சிட் போக்குவரத்து விமானங்களின் ஊழியர்கள்.
அமீரகத்தின் துறைமுகங்கள், எல்லைகள் மற்றும் ஃபிரீசோன் பாதுகாப்புக்கான பொது அதிகாரசபையிடமிருந்தும், சம்பந்தப்பட்ட எமிரேட்ஸின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்களின் உயர் மட்ட குழுவின் தலைவர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்று வரும் ஆண் மற்றும் பெண் தொழிலதிபர்கள்.
அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையினால் வகைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய துறையில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள்.
விலக்கு பெற்ற பயணிகள் பின்பற்ற வேண்டிய கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகள்
தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விலக்கு பெற்ற பயணிகளுக்கு கடுமையான கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகள் அமீரக அரசால் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை,
பயணம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.
எதிர்மறை சோதனை முடிவு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் மேலும் அதில் QR குறியீடு இருக்க வேண்டும்.
விமான நிலையம் வந்திறங்கியதும் ஒரு PCR பரிசோதனையை எடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நான்கு மற்றும் எட்டாவது நாட்களில் என இரண்டு PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
விலக்கு பெற்ற பயணிகள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரையிலும் கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருக்க வேண்டும்.