அமீரக செய்திகள்

துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் ‘1 மில்லியன் டாலர்’ கிராண்ட் பரிசை வென்ற இந்தியர்..!!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் 1 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சையத் அலி பாதுஷா திவன்ஷா என்ற அமீரக குடியிருப்பாளர், ஆகஸ்ட் 30 ம் தேதி அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 4392 அவருக்கு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று (செப்டம்பர் 13) துபாய் விமான நிலையத்தில் நடைபெற்ற மில்லினியம் மில்லியனர் தொடர் 434 இன் போது, பம்பர் பரிசான 1 மில்லியன் டாலர் கிராண்ட் பரிசை இந்தியரான சையத் அலி பாதுஷா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், முதன்முதலாக 1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் ப்ரோமோஷன் தொடங்கப்பட்டதிலிருந்து 1 மில்லியன் டாலர்களை வென்ற 215 வது இந்திய நாட்டவர் என்ற பெருமையையும் சையத் அலி பாதுஷா பெற்றிருக்கிறார். எவ்வாறாயினும், இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்களில் இந்திய நாட்டவர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், துபாய் டூட்டி ஃப்ரீயின் பம்பர் பரிசுக்கான அறிவிப்பை தொடர்ந்து இரண்டு சொகுசுக் கார்களுக்கான ‘Finest Surprise draw’ வும் நடத்தப்பட்டது. இந்த சர்ப்ரைஸ் டிராவில் துபாயில் வசிக்கும் பிஷ்ர் ஷிப்லாக் என்ற ஜெர்மன் வெளிநாட்டவர் Mercedes Benz S500 காரைத் தட்டிச் சென்றுள்ளார்.

அவர் கடந்த செப்டம்பர் 7 அன்று ஆன்லைனில் வாங்கிய Finest Surprise Series 1851 இன் டிக்கெட் எண் 0218, அவருக்கு இந்த ஆடம்பர காரை பரிசளித்துள்ளது. 47 வயதான ஷிப்லாக், கடந்த 15 ஆண்டுகளாக UAEயில் வசித்து வருகிறார். வழக்கறிஞராகப் பணிபுரியும் இவர், சுமார் 8 ஆண்டுகளாக தொடர்ந்து துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரோமோஷனில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவரைப்போலவே, அமீரகத்தில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டவரான ஸ்டீபன் கில்லெரெட் என்பவரும், செப்டம்பர் 1 ஆம் தேதி ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 549 இல் டிக்கெட் எண் 0809 உடன் ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்கை பரிசாக வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!