ஓமான்: வேலை செய்யும் இடத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவு..!! சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்ட மீட்புக்குழு..!!
ஓமானின் சீப் விலாயத் பகுதியில் இருக்கும் அல் கௌத் பகுதியில் உள்ள ஒரு வேலை செய்யும் இடத்தில் மலையிலிருந்து மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் மீது விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அவர்களை சரியான நேரத்தில் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி ஓமானின் குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) கூறுகையில், “மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் துறையின் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் சீப் விலாயத் பகுதியில் உள்ள அல் கௌத் பகுதியில் தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட இருவரைக் காப்பாற்றினர்” என கூறியுள்ளது.
மேலும் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இது போன்ற வேலை திட்டங்களை செயல்படுத்தும் போது முறையாக பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் நிறுவனங்களுக்கு CDAA அறிவுறுத்தியுள்ளது.