UAE: ஒரு மாதத்திலேயே 159 பிச்சைக்காரர்கள் கைது.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!
அமீரகத்தில் பிச்சை எடுப்பது சட்ட விரோதமானது என்றும் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவ்வப்போது காவல்துறை எச்சரிக்கையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது. இருந்தபோதிலும் அவ்வப்போது இந்த விதிமுறைகளை மீறி பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி அபுதாபியில் இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை 159 பிச்சைக்காரர்களை அபுதாபி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக கதைகளைப் புனைகிறார்கள் என்றும், இந்த தவறான கதைகளை நம்ப வேண்டாம் என்றும் மக்களை காவல்துறை கச்சரித்துள்ளது.
பிச்சை எடுப்பவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைத்து தெருக்களில் பிச்சை எடுப்பதைக் குறைப்பதில் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
உதவி தேவைப்படுபவர்கள் என சரியான நபர்களுக்கு நன்கொடைகள் சென்றடைவதை உறுதிசெய்ய, தனிப்பட்ட முறையில் தர்மம் வழங்குவதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ சேனல்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிச்சை எடுப்பது தொடர்பான வழக்குகளை 999 என்ற எண்ணில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தெரிவிக்குமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.