சென்னையிலிருந்து நாளை முதல் எதிஹாட் ஏர்வேஸ் விமான சேவை தொடக்கம்..!! மேலும் 4 நகரங்களிலிருந்தும் சேவை..!!
இந்தியாவிலிருந்து அமீரகம் வர நேற்று முதல் (ஆகஸ்ட் 5) அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நாளை ஆகஸ்ட் 7 முதல் சென்னை உட்பட இந்தியாவின் ஐந்து நகரங்களில் இருந்து தங்களின் விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக சென்னை, கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் புது தில்லி ஆகிய இந்திய நகரங்களிலிருந்து நாளை முதலே விமான சேவை துவங்கும் என்றும், அதற்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் 10 முதல் மேலும் சில இந்திய நகரங்களிலிருந்தும், அதேபோன்று இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இடங்களிலிருந்தும் அதன் விமான சேவைகளை தொடங்கும் என்று எதிஹாட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
இவற்றில் அகமதாபாத் (ட்ரான்சிட் சேவைக்கு மட்டும்), ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று இந்திய நகரங்கள் ஆகஸ்ட் 10 முதல் கூடுதலாக இயக்கப்படவுள்ள பகுதிகள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் பயணிகள் செல்லுபடியாகும் குடியிருப்பு மற்றும் பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்னதாக அமீரகத்திற்குள் COVID-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான ஆதாரம் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனுடன், அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் கூட்டாட்சி அல்லது உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்ற சில பிரிவுகளில் தடுப்பூசி போடாதவர்களும் பயணிக்கலாம் என்றும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.