UAE: ஆன்லைன் மோசடியால் 18 மில்லியன் திர்ஹம்ஸ் பணத்தை இழந்தவர்களிடம் திருப்பி ஒப்படைத்த அபுதாபி காவல்துறை..!!
அபுதாபியில் வசிக்கக் கூடிய குடியிருப்பாளர்களில் தொலைபேசி மோசடிகள் மற்றும் பிற ஆன்லைன் மோசடிகள் போன்ற சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டு சுமார் 18 மில்லியன் திர்ஹம் பணத்தை இழந்தவர்களிடம், மீண்டும் அந்த பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துளளது.
அபுதாபியில் நிதி மோசடி தொடர்பான புகார்களைக் கையாளும் ஒரு பிரிவான கிரிமினல் செக்யூரிட்டி பிரிவில் உள்ள தொடர்பு மையம் மூலம் இந்த பணம் பெறப்பட்டதாகவும், பணத்தை இழந்த குடியிருப்பாளர்களிடம் சேர்க்கப்பட்டதாகவும் அபுதாபி காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுளளது.
குடியிருப்பாளர்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் தனிப்பட்ட விவரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், முன்பின் தெரியாதவர்களுக்கு பாஸ்வர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடி எண்களைக் கொடுக்க வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அமீரகத்தில் இது போன்ற ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அபுதாபி காவல் துறையினர் சைபர் குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊக்குவித்தும் வருகின்றனர். இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதில் தேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் ஆன்லைன் மோசடி தொடர்பான சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது அழைப்புகளை 800 2626 என்ற எண்ணிற்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அபுதாபி காவல்துறையின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாகவோ பொதுமக்கள் தெரிவிக்குமாறும் குடியிருப்பாளர்களை அபுதாபி காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.