அபுதாபியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென பரவிய தீ..!! காயங்கள் எதுவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட குடியிருப்பாளர்கள்…
அபுதாபியில் இன்று செவ்வாய்க்கிழமை , அக்டோபர் 24ம் தேதி அதிகாலை குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் தீ வேகமாக பரவியதால் அதில் தங்கியிருந்த குடியிருப்பாளர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் அதிர்ஷடவசமாக காயங்கள் எதுவுமின்றி அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அபுதாபி காவல்துறையினர் மற்றும் அபுதாபி சிவில் டிபென்ஸ் ஆணையக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி, பின்னர் ஒருவழியாக காலை 05:04 மணியளவில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை குளிர்விக்கும் மற்றும் புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அமீரகத்தில் தண்டனைக்குரிய போக்குவரத்துக் குற்றமாகக் கருதப்படும் ‘rubbernecking’க்கு எதிராகவும் அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. அதாவது, இதுபோன்ற விபத்து நடந்த இடங்களில் கூட்டம் கூடுபவர்கள் போக்குவரத்தை தடுப்பது மட்டுமின்றி, அவசரகால வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விபத்து நடந்த இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வது, தனிப்பட்ட ஆதாயத்திற்காக துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்குமாறும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையம் இது போன்ற சம்பவம் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே பெறுமாறு அமீரக குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel