துபாய்: மசூதிகளில் சேவை புரிந்து வரும் இமாம்களுக்கு 10 ஆண்டு கோல்டன் விசா..!! துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!!
அமீரகத்தில் குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு 10 ஆண்டு கோல்டன் விசா வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் சேவை செய்து வரும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்படும் என்று துபாய் ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவுப்படி, மசூதிகளின் இமாம்கள், முஅத்தின்களுக்கு நிதி போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களுக்கு கோல்டன் ரெசிடென்ஸி வழங்க துபாய் பட்டத்து இளவரசரும் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஈத் அல்-ஃபித்ருக்கு முன்னதாக வந்த இந்த அன்பான சைகையானது, இஸ்லாத்தின் போதனைகளை அறிமுகப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையினைப் பரப்புவதிலும், மேற்கொண்ட அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மசூதிகளின் இமாம்கள், மற்றும் முஅத்தின்களுக்கு நன்றி தெரிவித்த ஷேக் ஹம்தான், சமூகத்தில் அவர்களின் முக்கிய பங்கு மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் மதிக்கப்படுகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகமானது நீண்ட கால குடியிருப்பு விசாக்களுக்கான புதிய முறையை அமல்படுத்தியது. இந்த புதிய அமைப்பு வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதான நிலப்பரப்பில் தங்கள் வணிகத்தின் 100 சதவீத உரிமையுடன் வாழவும் உதவுகிறது.