அமீரக குடியிருப்பாளர்களுக்கு இனி GDRFA / ICA முன் அனுமதி தேவையில்லை.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!
இந்தியாவில் உள்ள எந்த இடத்திலிருந்தும் துபாய்க்கு பயணம் செய்யும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு இனி பயணத்திற்கு முந்தைய GDRFA / ICA அனுமதிகள் தேவையில்லை என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகளுக்கான ரேபிட் பிசிஆர் சோதனைத் தேவை திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்வதற்கான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த புதிய வழிகாட்டுதல்களில் “அமீரக குடியிருப்பாளர்கள் இனி துபாய் விமான நிலையங்களுக்குப் பயணிக்க GDRFA / ICA அனுமதி தேவையில்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவல் அமீரகத்தில் பெருமளவில் குறைந்து விட்டதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான பயண கட்டுப்பாடுகளை அமீரக அரசு படிப்படியாக நீக்கி வருகிறது. இந்நிலையில், அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்பி வருவதற்கு முன் அனுமதி தேவை என்றிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடும் தற்போது நீக்கப்பட்டுளளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் பயணிகளுக்கு 48 மணிநேர செல்லுபடியாகும் எதிர்மறையான சோதனை முடிவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், “பயணிகள் செல்லுபடியாகும் எதிர்மறையான கோவிட்-19 சோதனைச் சான்றிதழை வழங்க வேண்டும், இது SARS-CoV-2 வைரஸ் RNA க்கான நியூக்ளிக் அமிலத்தின் தரமான கண்டறிதலுக்கான மூலக்கூறு நோயறிதல் சோதனையின் அடிப்படையில் இருக்க வேண்டும், சோதனை முடிவின் செல்லுபடி காலம் மாதிரியைச் சேகரிக்கும் நேரத்திலிருந்து 48 மணிநேரம் ஆகும், இது QR குறியீட்டை கொண்டிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்”என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் “பயணிகள் துபாய்க்கு வந்தவுடன் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், எதிர்மறையான முடிவு வெளியாகும் வரை அவர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், நேர்மறை சோதனை ஏற்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்” என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து அமீரகம் பயணிக்கும் பயணிகளுக்கான இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.