KSA: 9 அத்தியாவசிய வணிக நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்கும் திட்டம் நாளை முதல் தொடக்கம்..!!
சவூதி அரேபியாவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இருக்கும் ஒன்பது விதமான வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் நாளை (ஆகஸ்ட் 20) வியாழக்கிழமை முதல் தொடங்க இருப்பதாக சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் இந்த புதிய முடிவின்படி, அரசு பட்டியலிட்டுள்ள குறிப்பிட்ட வணிக நடவடிக்கைகைகளை வெளிநாட்டினருக்கு பதிலாக சவூதி நாட்டு குடிமக்கள் மட்டுமே செயல்படுத்த முடியும். சவூதி குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு சவூதி அரேபிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர்மயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக நாளை முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய முடிவானது அந்நாட்டின் மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமத் அல் ராஜி அவர்களால் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே சவூதி அரேபிய நாட்டில் இருக்கக்கூடிய மருந்தகங்களில் வெளிநாட்டினருக்கு பதிலாக சவூதி குடிமக்களை பணியமர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக 20 சதவீத அளவில் இந்த திட்டம் செயப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ள வணிக நடவடிக்கைகள்…
- காபி, தேநீர்
- தேன், சர்க்கரை, மசாலா பொருட்கள்
- நீர் மற்றும் பானங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பேரீச்சம்பழங்கள்
- தானியங்கள், விதைகள், பூக்கள், தாவரங்கள் மற்றும் விவசாய பொருட்கள்
- புத்தகங்கள், எழுதுபொருள் கருவிகள் மற்றும் மாணவர் சேவைகள்
- பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பழமையான பொருட்கள்
- பொம்மைகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்
- இறைச்சி, மீன், முட்டை, பால் பொருட்கள், வெஜிடபிள் ஆயில்
- துப்புரவு பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் சோப்புகள்