UAE: ஆகஸ்ட் 5 முதல் ட்ரான்சிட் பயணிகளும் அமீரக விமான நிலையம் வழியாக பயணிக்க அனுமதி..!! நிபந்தனைகளை வெளியிட்ட ஏர்லைன்ஸ் நிறுவனம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தால் பயண தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 5 முதல் அமீரகம் திரும்பலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததை தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலிருந்தும் வேறு ஒரு நாட்டிற்கு பயணிக்கும் பயணிகள் அமீரக விமான நிலையங்கள் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் ட்ரான்சிட் போக்குவரத்து பயணிகளுக்காக சிறப்பு ஓய்வறைகளை ஒதுக்கும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து NCEMA வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமீரகம் வழியாக பயணிக்கும் பயணிகளின் கடைசி இலக்கு (இறுதியாக சென்றடையும் நாடு) அமீரக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயணம் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் ஒரு ஆய்வக PCR சோதனை முடிவு சமர்ப்பிக்கப்பட்டால், தடைசெய்யப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் ட்ரான்சிட் போக்குவரத்து பயணிகளுக்காகவும் விமான நிலைய சேவை மீண்டும் தொடங்கும். இதற்காக நாட்டின் விமான நிலையங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு ட்ரான்சிட் பயணிகளுக்கு என்று ஒரு சிறப்பு ஓய்வறைகள் விமான நிலையத்தில் ஒதுக்கப்படும்” என்று அதன் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எதிஹாட் விமான நிறுவனம் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தற்போது பங்களாதேஷிலிருந்து மட்டுமே ட்ரான்சிட் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்னர் தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் மீண்டும் தொடங்கியவுடன் மற்ற நாடுகளிலிருந்து பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.