அமீரகத்தில் இப்படி ஒரு இடமா..? அதுவும் இங்க மட்டும் தான் இருக்கா..? நீங்க சுற்றிப்பார்க்க ஒரு சூப்பர் பார்க் வந்தாச்சு..!!
அமீரகம் என்றாலே பாலைவனம், உயர்ந்த கட்டிடங்கள், எல்லா இடங்களிலும் பீச், பார்க், மால்கள் என்பதுதான் நமது எண்ணத்திற்கு வரும். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் முன்னதாக சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே Ice Age என்று சொல்லக்கூடிய பழங்காலத்தில் தோன்றிய புதைபடிவ குன்றுகள் (fossil dunes) அமீரகத்தில் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?? ஆனால் அது உண்மைதான்.
அபுதாபிக்கு கிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல் வத்பாவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த புதைபடிவ குன்றுகள் மேற்கு ஆசியாவிலேயே முதன்மையானது ஆகும். மேலும் ஏழு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1,700 க்கும் மேற்பட்ட புதைபடிவ குன்றுகளை இது உள்ளடக்கியது. அரசால் தற்பொழுது வரை பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பகுதியானது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது போன்றதொரு பார்க்கை அமீரகத்தில் திறப்பது இதுவே முதல் முறையாகும்.
புதைபடிவ குன்று என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா?
பழங்காலத்தில் நிலத்தடி நீரில் இருந்து கால்சியம் கார்பனேட் மற்றும் இதர உப்புகளின் படிவுகளால் உருவான லேசாக சிமென்ட் போன்றிருக்கும், மணல் மேடுகளால் ஒரு புதைபடிவ குன்று உருவாக்கப்படுகிறது. புதைபடிவ குன்றுகளின் வடிவங்கள் காற்றின் சக்தி மற்றும் அங்கு படிந்துள்ள மணலை பொறுத்து வருகின்றன.
அல் தஃப்ரா பிராந்தியத்தின் ஆட்சியாளரின் பிரதிநிதியும், அபுதாபி சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த பகுதியானது ஐக்கிய அரபு அமீரகத்தின் இயற்கை பாரம்பரியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இது யுனெஸ்கோவின் புவிசார் பூங்காக்களின் உலகளாவிய பட்டியலில் இடம்பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த பார்க்கில் மூன்று கிலோமீட்டர் பாதைகள் உள்ளன. புதைபடிவ குன்றுகளுக்கு செல்லும் பார்வையாளர்கள் மியூசிக் மற்றும் லைட் ஷோக்களை இங்கு கண்டுகளிக்கலாம். அவை பார்க் திறக்கப்படும் நேரங்களில் நடைபெறும் மற்றும் 200 பார்வையாளர்களைக் கொண்ட ஆம்பிதியேட்டர் பகுதியில் இருந்து இதனை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பிரத்யேக இடங்களில் உணவு மற்றும் பானங்கள் விற்கப்படும் ட்ரக்குகள் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்கு பார்வையாளர்கள் வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிடலாம். விடுமுறை நாட்களில் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) நள்ளிரவு 12 மணி வரை தளம்இது திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் இந்த பார்ரக்கினை இலவசமாக அணுகலாம் என்பதும் குறிப்பிடத்ததக்கது.