துபாய், இந்தியாவிற்கு இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 15 நாட்கள் ரத்து..!!
துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானங்கள் செப்டம்பர் 18 (இன்று) முதல் அக்டோபர் 3 வரை என 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தின் சேவைகளானது நள்ளிரவு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்காக வந்தே பாரத் மிஷனின் கீழ் விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஏர் பபுள் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் விமான சேவைகளை இயக்கி வருகிறது.
துபாய் சர்வதேச விமான நிலையமானது வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும் “ரத்து செய்யப்பட்ட (cancelled)” நிலையைக் காட்டத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து புறப்படும் சில விமானங்கள் “செயல்பாட்டு காரணங்களால் (due to operational reasons)” ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு செய்தி வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இருப்பினும் துபாய் மற்றும் இந்தியாவிற்கு இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் ரத்து செய்யப்படுவது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.