தினசரி பார்வையாளர்கள் கண்கவரும் 1,080 ஏக்கர் பரப்புள்ள எக்ஸ்போ துபாய்..!! ஒரே இரவில் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது..??
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் உலகின் மிகப்பெரிய கண்காட்சியான துபாய் எக்ஸ்போவினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடந்த ஆறு மாதங்களாக தினந்தோறும் பார்வையாளர்களை வரவேற்கும் எக்ஸ்போவின் தூய்மையான தோற்றத்திற்கு துப்புறவுத் தொழிலாளர்கள் ஆற்றி வரும் பங்கு மிக முக்கியமானதாகும்.
தினந்தோறும் இரவு பார்வையாளர்கள் எக்ஸ்போவை விட்டு வெளியேறியவுடன், நூற்றுக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் தங்கள் அன்றாட வேலையைத் தொடங்குகிறார்கள்.
1,000 துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழு 24 மணி நேர இடைவெளியில் 1,080 ஏக்கர் பரப்பளவு கொண்ட எக்ஸ்போ தளத்தை சுத்தமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் பணியமர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் சுமார் 400 தோட்டக்காரர்கள் ஒவ்வொரு இரவிலும் செடிகள் மற்றும் புதர்களை ஒழுங்கமைத்து அழகுபடுத்துகிறார்கள்.
இரவு நேரமானது, உலக கண்காட்சியை சுத்தம் செய்வதற்கான நேரமாக மாறுகிறது என்று எக்ஸ்போ 2020 துபாயின் செயல்பாட்டு இயக்குனர் டோனி மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேத்யூஸ், அவரது குழு அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தடையற்ற செயல்பாட்டு பயணத்தை வழங்குகிறது என்றும், நாங்கள் இரவில் செயல்படும் குழுவாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூறுகையில், “சுத்தம் செய்ய எங்களிடம் பல துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். பார்வையாளர்கள் எக்ஸ்போவை விட்டு வெளியேறியவுடன் அவர்கள் தங்களது பணியை தொடங்குகிறார்கள். மேலும் காலையில் பார்வையாளர்களுக்காக எக்ஸ்போ திறக்கப்படும் போது எக்ஸ்போ தளத்தை முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பதே எங்கள் நோக்கம்.” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “எங்களிடம் சர்வதேச நிபுணர்களின் ஒரு பெரிய குழு உள்ளது, அவர்கள் எக்ஸ்போ தளத்தில் தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “எக்ஸ்போ தளம் முழுவதும் 800,000 செடிகள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ளன, அவற்றை முறையாக வளர்க்க பராமரிப்பு தேவைப்படுகிறது. இதற்கிடையில், 80 க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற, உயர்மட்ட துப்புரவு பணியாளர்கள் சாலைகளில் பணிபுரிந்து, அடுத்த நாளுக்கு எல்லாம் தூய்மையாகவும் அழகாகவும் இருப்பதை உறுதிசெய்கிறார்கள். பகலில் தோட்டக்காரர்கள் வேலை செய்வது மிகக் குறைவு. நாங்கள் பெரும்பாலான வேலைகளை இரவில் செய்கிறோம். எங்களிடம் சுமார் 700 முதல் 1,000 தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்
கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கைகளை சமாளிப்பது பற்றி கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு நாளும் 1,000 லிட்டர் சானிடைசர்கள் மற்றும் தயாரிப்புகளை பயன்படுத்துகிறோம். மக்கள் அடிக்கடி தொடக்கூடிய இடங்கள் மற்றும் வழக்கமான சுத்தம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். நாள் முழுவதும் நாங்கள் பெவிலியன் பகுதிகள், பொது மைதானங்கள், வருகைத் தளங்கள் ஆகியவற்றில் கடுமையான சுத்திகரிப்புத் திட்டத்தை மேற்கொள்வோம். எக்ஸ்போ 2020 இல் உள்ள செயல்பாட்டுக் குழு டெட்டால் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தயாரிப்புகளை வழங்கி வருகிறது”.
“எங்கள் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டிய முக்கிய பகுதிகளை நாள் முழுவதும் சுத்தம் செய்கிறார்கள். இரவில், எங்களிடம் 1,000 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் முறைப்படி எக்ஸ்போ தளத்தை தூய்மைப்படுத்துகிறார்கள்” என கூறியுள்ளார்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மேத்யூஸ், மார்ச் 31 அன்று உலக கண்காட்சி முடிவடைந்த பிறகும், தளத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க குழு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.