அமீரகத்தில் ஆபத்தான வானிலையின்போது அதிகாரிகளின் உத்தரவை மீறி வெளியேவரும் குடியிருப்பாளர்களுக்கு சிறை தண்டனை.. சட்ட ஆலோசகர் தெரிவிப்பு..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார தொடக்கத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து தூசி நிறைந்த வானிலை காணப்பட்டது, இதனால் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். புழுதிப் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான வானிலை குறித்து தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த வகையில், மோசமான வானிலையின்போது தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் எச்சரிக்கைகளை வெளியிடுகின்றனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காகவும், மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும் மோசமான வானிலையின்போது காவல்துறை மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
“அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கண்டுக்கொள்ளாமல் மோசமான வானிலை ஏற்படும்போது வெளியில் சுற்றுவது முற்றிலும் தவறாகும். இந்த செயல்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று கலதாரி வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களின் மூத்த பங்குதாரர் அப்துல்லா ஜியாத் கலதாரி தெரிவித்துள்ளார்.
ஃபெடரல் ஆணை சட்ட எண் 31/2021 இன் கீழ் பிரிவு 399 இன் படி, தன்னையும், மற்றோரையும் ஆபத்தில் இழுக்கும் நபருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார். எனவே குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் எச்சரிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மேலும் விளக்கினார்.
கடந்த மாதம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தகத்து.