UAE: 250 மில்லியன் லிட்டர் நீர்.. 2 மில்லியன் லிட்டர் கிருமிநாசினிகள்.. 1.8 மில்லியன் நேரங்கள்.. சுத்திகரிப்பு திட்டத்தின் முழு விபரங்களை வெளியிட்ட அபுதாபி Tadweer..!!
அபுதாபியில் இருக்கக்கூடிய அபுதாபி கழிவு மேலாண்மை மையம் (Tadweer) கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அபுதாபியில் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த சுத்திகரிப்பு திட்டத்தில், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் நிபுணர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் என மொத்தம் 972 நபர்கள் கொண்ட குழுவானது இந்த பணியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது 227 நாட்களில் (நவம்பர் 8 வரை) ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்ததாகவும், அதன் மூலம் மொத்தம் 1.8 மில்லியன் நேரங்களில் சுத்திகரிப்பு திட்டத்தை நிறைவு செய்தகாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபுதாபியில் இத்திட்டத்தின் மூலம் 229 பகுதிகளையும், சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பு திட்டத்திற்காக மொத்தம் 250 மில்லியன் லிட்டர் நீர் மற்றும் இரண்டு மில்லியன் லிட்டர் கிருமிநாசினிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் ஒரு நாளைக்கு சராசரியாக 2,050 கிலோமீட்டர் தூர அளவில் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 485,000 கிலோமீட்டர் வரை சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தத்வீரின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேலம் அல் காபி அவர்கள் கூறுகையில், “தேசிய கிருமிநாசினி திட்டத்தில் உகந்த முடிவுகளை பெறுவதை உறுதி செய்வதற்காக, Tadweer அதன் செயல்பாடுகளை அதிகரித்ததுடன், வேலைத்திட்டத்தின் பலத்தையும், வேலை நேரத்தையும் அதிகரித்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சுத்திகரிப்பு திட்டம் முழுவதும் எங்கள் குழு ஆற்றிய சிறப்பான பங்கைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இத்தகைய முயற்சிகள் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலை உறுதி செய்வதற்கான தட்வீரின் நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.