UAE: தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கும் நிர்வாக விதிமுறைகளுக்கு ஒப்புதல்..!! துபாய் ஆட்சியாளர் ட்வீட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், இந்த புத்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
இதில் நாட்டின் புதிய சட்டங்களின் கீழ் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டம் நடைபெற்றதற்குப் பிறகு, துபாய் ஆட்சியாளர் ட்விட்டரில் நாட்டில் தொழிலாளர் உறவுகளுக்கான நிர்வாக விதிமுறைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து “சிறந்த, அதிக சுறுசுறுப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பணிச்சூழலை நிறுவுவதே எங்கள் குறிக்கோள்” என்று துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது கூறியுள்ளார்.
புதிய தொழிலாளர் உறவு சட்டத்தின் கீழ், 12 வகையான பணி அனுமதிகள் (work permit) உள்ளன. மேலும் முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், செயல்திறனை அதிகரிக்கவும் மற்றும் புதிய வகையான வேலைகளான ஃப்ரீலேன்சர், நெகிழ்வான, பகுதி நேர தற்காலிக வேலை மற்றும் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கான வேலைகளை ஒழுங்குபடுத்தவும் தொழிலாளர் உறவுகளின் நிர்வாக விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், விளையாட்டு கவுன்சில்கள், கூட்டமைப்புகள், ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய நாட்டில் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூடுதலாக, தொழில்துறை சொத்துக்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் தொடர்பான கண்டுபிடிப்புகள், காப்புரிமைப் பதிவை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரிகள் மற்றும் பிறவற்றிற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் புதிய தொழிலாளர் சட்டம் இன்னும் இரு வாரங்களில் அமலுக்கு வர இருப்பதால், தொழிலாளர் உறவுகள் சட்டத்தின் நிர்வாக விதிமுறைகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.