அமீரகத்தில் மழையுடன் துவங்கிய வார விடுமுறை… குடியிருப்பாளர்கள் உற்சாகம்…
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதையொட்டி வானிலை அதிகாரிகள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அபுதாபி காவல்துறை, ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், மழை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளை பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது.
அதே போல், துபாய் காவல்துறையும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. இது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அன்புள்ள ஓட்டுனர்களே, கனமழையின் போது உங்கள் காருக்கும் மற்ற வாகனங்களுக்கும் இடையில் போதுமான மற்றும் பாதுகாப்பான இடத்தை விட்டு செல்லுங்கள்” என குறிப்பிட்டுள்ளது.
புஹாசா மற்றும் யாவ் அல் நத்ரா (அல் தஃப்ரா பிராந்தியம்) ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அத்துடன் டெல்மா ஐலேண்ட், அல் ஷவாமேக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.
அல் ஃபக்கா, அல் கஸ்னாவில் மிதமான மழை, அபுதாபி – அல் அய்ன் சாலையில் லேசானது முதல் மிதமானது மற்றும் அல் பதீன் விமான நிலையத்தில் லேசான மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.