அமீரக சட்டங்கள்

UAE: எமிரேட்ஸ் ஐடி தேவை இல்லாமலேயே விசா, பாஸ்போர்ட் தகவல்களை பெற புதிய அமைப்பு..!! விரைவில் நடைமுறைக்கு வரும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP), Akeed என அழைக்கப்படும் புதிய அமைப்பு ஒன்றினை இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.

இது குடியிருப்பாளர்களின் விசா, பாஸ்போர்ட் போன்ற விவரங்களைப் பெறுவதற்கான எமிரேட்ஸ் ஐடி ஸ்கேனர்களின் தேவையை நீக்கி, ICP தரவுத்தளத்திலிருந்து நேரடியாக குடியிருப்பாளர்களைப் பற்றிய சரியான தரவை ஆதாரமாகக் கொள்ள தனியார் துறை நிறுவனங்களை அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அமைப்பு சமீபத்தில் துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்று முடிந்த Gitex Global என்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியில் ICP ஆல் தொடங்கப்பட்ட பல ஸ்மார்ட் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது, நாட்டில் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் பற்றிய தகவல்களை ICP தரவுத்தளத்தில் இருந்து பெற எமிரேட்ஸ் ஐடிகள் கார்டு ரீடர்களில் செருகப்படுகின்றன. ஆனால், Akeed சிஸ்டம் நிதி, சுகாதாரம், காப்பீடு மற்றும் பிற துறைகளில் உள்ள நிறுவனங்களுக்குத் தேவையான தகவலை ICP தரவுத்தளத்திலிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ள உதவுகிறது. அதாவது, புதிய அமைப்பு கார்டு ரீடர் தேவையை நீக்குகிறது, இதனால் மக்கள் எமிரேட்ஸ் ஐடியை கார்டு ரீடரில் வைக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக, ஒரு சுகாதார நிறுவனத்திற்கு குடியிருப்பாளர் ஒருவரின் பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் அல்லது இன்ஷூரன்ஸ் பாலிசி போன்றவற்றை தரவுத்தளத்தில் இருந்து பெறலாம். இது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும்.

குறிப்பாக, எமிரேட்டில் உள்ள நிறுவனங்கள், ஏற்கனவே ரெசிடென்சி பெர்மிட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகள் வழங்கப்பட்ட நபர்களுக்கு Akeed மூலம், தகவல்களைப் பெற முடியும். இருப்பினும், இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுமா அல்லது நிறுவனங்கள் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

ICPயின் ஸ்மார்ட் திட்டங்கள்:

Gitex Global நிகழ்வின் போது, அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளை போன்ற ஆவணங்களை புதுப்பிக்கவும், 24×7 நேரமும் செயலாக்குவதற்கும் கியோஸ்க்குகளை பயன்படுத்தும் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படுவதாக ICP தெரிவித்தது.

மேலும், 2023 அல்லது 2024 இல் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தவுடன் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில் இந்த கியோஸ்க்குகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து வெளியேறாமல் அல் குவைஃபாத் எல்லையை சிரமமின்றி கடக்க உதவும் Smart Land Borders Crossing என்ற புதிய அமைப்பை ICP அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சிஸ்டத்தைப் பயன்படுத்துவதற்கு வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். சிஸ்டம் கார் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து, முதல் தடையைத் திறக்கும். இரண்டாவது கட்டத்தில், மக்கள் தங்கள் பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸ் அல்லது முக அங்கீகாரத்தை ஸ்கேன் செய்வார்கள். இறுதியாக ICP அமைப்பு தரவைச் சரிபார்த்தவுடன், எல்லை திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!