ஈத் அல் அத்ஹா: இன்று பிறை தென்படுகிறதா என பார்க்க பொதுமக்களுக்கு சவூதி அரசு வேண்டுகோள்..!!
சவூதி அரேபியாவில் உள்ள பொதுமக்கள் ஜூலை 9, வெள்ளிக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை தென்படுகிறதா என பார்க்க முயற்சிக்குமாறு சவுதி அரேபியாவின் உச்சக்குழு அறிவித்துள்ளது.
வெற்றுக் கண்ணால் அல்லது தொலைநோக்கியின் மூலம் பிறையைக் காணும் எவரும் அருகிலுள்ள உச்சக்குழுக்கு தகவல் அளித்து அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியாக இருக்கக்கூடும் என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல்-ஜர்வான் தெரிவித்துள்ளார்.
வானியல் ரீதியாக, துல் ஹஜ் மாதத்தின் பிறை ஜூலை 10 சனிக்கிழமை காலை 05:17 மணிக்கு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இது சுமார் 34 நிமிடங்கள் அடிவானத்தில் தங்கியிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இருப்பின், ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாகவும் ஜூலை 19 திங்கள், அரஃபா தினமாகவும் கொண்டாடப்படும். அதைத் தொடர்ந்து ஜூலை 20 செவ்வாய்க்கிழமை ஈத் அல் அத்ஹாவின் முதல் நாளாக இருக்கும்.
இருப்பினும் இன்று பிறை பார்ப்பதைப் பொறுத்தே ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் எப்போது என அனைவருக்கும் உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.