UAE: வாகன ஓட்டிகளே உஷார்..!! சீட் பெல்ட், செல்போன் விதிமீறல்களை கண்டறிய புதிய டெக்னாலஜி..!! ஜனவரி முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வரும் 2021 ம் ஆண்டு ஜனவரி 1 முதல் வாகன ஓட்டிகள் புரியும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய ஒரு புதிய தானியங்கி அமைப்பு பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி அமைப்பானது வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துதல் மற்றும் சீட் பெல்ட் அணிய தவறுதல் போன்ற விதிமீறல்களைக் கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது.
அபுதாபி டிஜிட்டல் ஆணையம் (ADDA) அபுதாபி காவல்துறையின் ஒத்துழைப்புடன் VAST எனப்படும் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளதாக இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது. சாலை விபத்துகளை குறைத்து பாதுகாப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். அதே சமயம் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
அபுதாபி காவல்துறையினர் இந்த புதிய அமைப்பின் ஒரு பகுதியாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கேமராக்கள் வழியாக உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்க ரேடார் கண்காணிப்பு பகுதியை அமைத்துள்ளனர். சீட் பெல்ட் அணியாமல் இருத்தல் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்களை விரைவாகக் கண்டறிய ஒரு தானியங்கி செயல்முறை படங்களை பகுப்பாய்வு செய்கிறது. பின்னர் விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு தங்கள் நடத்தையை உடனடியாக சரிசெய்யுமாறு ஒரு SMS அறிவிப்பையும் இந்த அமைப்பின் மூலம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ADDA வின் இயக்குநர் ஜெனரல் முகமது அப்தெல்ஹமீத் அல் அஸ்கர் அவர்கள் கூறுகையில், “அபுதாபி காவல்துறையுடனான இந்த ஒத்துழைப்பு, துல்லியமான தரவுகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்துவதற்கான ADDA இன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும், மேலும் புதிய தொழில்நுட்பங்களிலிருந்து இது டிஜிட்டல் அரசாங்கத்தை செயல்திறன் மிக்க, தனிப்பயனாக்கப்பட்ட, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பானதாக மாற்ற உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சாலை விபத்து குறைப்பு மற்றும் விபத்தால் ஏற்படும் அபாயம் போன்ற விகிதங்களை குறைக்க இந்த புதிய அமைப்பு கணிசமாக பங்களிக்கும், இதனால் அபுதாபி முழுவதும் சாலை பாதுகாப்பு நிலையானது, மேலும் அதிகரிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.