COVID-19: துபாய் காவல்துறையில் தன்னார்வலராக இணைந்து பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு..!!
கோவிட் -19 க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக தன்னார்வ ரோந்துப் பணிகளில் இணைய விரும்பும் தன்னார்வலர்களுக்கு துபாய் காவல்துறை தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது.
21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், மற்றும் கொரோனாவிற்கான பரிசோதனையில் எதிர்மறை முடிவைப் பெற்றவர்கள், குதிரைகள் சவாரி செய்வதற்கும் ஹெல்மெட் அணிவதற்கும் பழக்கமானவர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோந்துப் பணியானது அல் கவானீஜ், அல் வர்கா, அல் பெடா, உம் சுகீம், அல் பர்ஷா, சிட்டி வாக், JBR மற்றும் பவுல்வர்டு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
துபாய் மவுண்டட் காவல்துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகமது அல் அத்ப் கூறுகையில், துபாய் காவல்துறை கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியை துவக்கியுள்ளது, “அனைவருக்கும் பொறுப்பு (All is responsible for all)” என்றழைக்கப்படும் இந்த முயற்சி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பொதுமக்களுக்கு உதவ மற்றும் தன்னார்வ தொண்டு புரிய அனுமதிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 2,298 காவல்துறை ரோந்துப் படையினர் துபாய் முழுவதும் பணியாற்றியதுடன், 4,580 பேர் மற்றும் 11,562 வாகனங்களுடன் தொடர்புகொண்டு, தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விதி மீறல் புரிந்த 209 வாகனங்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதற்காக 5,146 பாதசாரிகளையும் கண்டறிந்து, அத்துடன் 47 போக்குவரத்து எச்சரிக்கைகள் மற்றும் அபராதங்களையும் பிறப்பித்து மவுண்டட் காவல்துறையினர் உதவியதாக அல் அத்ப் கூறியுள்ளார்.
துபாயின் மவுண்டட் காவல்துறையில் சேருவதற்கு முன்பு தன்னார்வலர்கள் சில தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இணைய ஆர்வமுள்ளவர்கள் https://www.dubaipolice.gov.ae என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.