UAE: போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை அறிமுகம்..!
அமீரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக்க கட்டணங்களை தவனை முறையில் செலுத்துவதற்கான திட்டத்தை துபாய் போலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வட்டியில்லா இலகு தவணை முறையில் அபராதங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வங்கிகளின் மூலம் இப்போக்குவரத்து அபராதங்களை செலுத்தலாம். அபராதப் பணத்தை 3, 6, 12 மாத தவணைகளில் முறையில், செலுத்த அதிகபட்சமாக 24 மாத தவணை வழங்கப்படும். இதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இணைவதற்கு துபாய் போலிஸ் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இலகு தவணை கொடுப்பனவு முறையில் அபராதத் தொகை தனி நபர்களுக்கு 5,000 திர்ஹம்ஸுகளுக்கு மேற்பட்டதாகவும், நிறுவனங்களுக்கு 20,000 திர்ஹஸுகளுக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பக் கோரிக்கைகள் அமீரக மத்திய வங்கிக்கு அனுப்பப்படும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற காரணம் குறித்து விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.
அபராதத் தொகையை செலுத்தி முடிக்கும்வரை குறித்த வாகனத்தை விற்பனை செய்வதற்கு அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொருவருக்கு மாற்றுவற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இலகு தவணை கொடுப்பனவுகளை உரிய வேளையில் செலுத்தத் தவறுபவர்கள் 2 வருடத்திற்கு இந்த திட்டத்திலிருந்து தடை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.