எக்ஸ்போ 2020 துபாய்: தடுப்பூசி அல்லது எதிர்மறை PCR சான்றிதழ் பார்வையாளர்களுக்கு கட்டாயம்..!!
துபாய் எக்ஸ்போ 2020 அடுத்த மாதம் துவங்கப்படவிருக்கும் வேளையில், எக்ஸ்போவிற்கு வரும் பார்வையாளர்களில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் புதன்கிழமை எக்ஸ்போ அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறையின்படி கொரோனாவிற்கான தடுப்பூசி அல்லது எதிர்மறை PCR சோதனை சான்றிதழை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நெறிமுறையின்படி பார்வையாளர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது எக்ஸ்போ வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை PCR சோதனைக்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
தடுப்பூசி போடாமல் எக்ஸ்போ டிக்கெட் வைத்திருப்பவர்கள் மேற்கூறிய குறிப்பிட்ட காலத்திற்குள் PCR சோதனை செய்யவில்லையெனில், எக்ஸ்போ 2020 தளத்திற்கு அருகில் உள்ள PCR சோதனை மையத்தில் தங்களை சோதித்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நகரம் முழுவதும் PCR சோதனை மையங்களின் நெட்வொர்க் கிடைக்கும் என்றும் இதன் பட்டியலை எக்ஸ்போ 2020 இணையதளத்தில் காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஏதேனும் செல்லுபடியாகும் எக்ஸ்போ 2020 டிக்கெட்டுடன், எக்ஸ்போ 1-நாள் அல்லது பல நாள் பாஸை வழங்கும்போது, PCR சோதனை இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்போவின் வலுவான பாதுகாப்புத் திட்டங்களில் அனைத்து எக்ஸ்போ மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகிய அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதும் கட்டாயமாகும்.
மேலும் ஆன்-சைட் சானிடைசேஷன் நிலையங்கள், உட்புறம் மற்றும் வெளியில் கட்டாய முகக்கவசம் அணிதல் மற்றும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்போதும் பராமரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரும், எக்ஸ்போ 2020 துபாயின் டைரக்டர் ஜெனரலுமான ரீம் அல் ஹாஷிமி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவும், எக்ஸ்போ 2020 க்கு வருபவர்களை வரவேற்கவும் நாங்கள் தயாராகும்போது, கொரோனாவிற்கு எதிரான நமது வெற்றிகளை நாம் கட்டியெழுப்ப வேண்டும், கடந்த எட்டு மாதங்களில் கொரோனா நோய்த்தொற்றில் கிட்டத்தட்ட 84 சதவிகிதம் சரிவை நாம் கண்டுள்ளோம். அனைத்து பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து உலகளாவிய சுற்றுலா மீட்பை முன்னெடுத்து வருவதால், எக்ஸ்போ 2020 துபாய் தான் கொரோனாவிற்குப் பிறகான மிகப்பெரிய அளவு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட ஒரே உலகளாவிய கூட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களால் இயக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சோதனைத் திட்டங்கள் உட்பட அமீரகம் முழுவதும் பரந்த உத்திகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
செப்டம்பர் 2021 நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட 19 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை குடியிருப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது மற்றும் அதன் மக்கள்தொகையில் 80 சதவிகிதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது.
மேலும் துபாய் கடந்த ஜூலை 2020 இல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து சுற்றுலாவாசிகளின் சீரான வருகையைக் கண்டது. 2021 ம் ஆண்டின் முதல் பாதியில் 2.85 மில்லியன் விசிட்டர்களை வரவேற்றது. எக்ஸ்போ 2020 துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களின் காரணமாக இந்த எண்ணிக்கை நான்காவது காலாண்டில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை இயங்கும் எக்ஸ்போ 2020, படைப்பாளிகள், புதுமை, மனித முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்தின் ஆறு மாத கொண்டாட்டத்தின் மூலம் புதியதோர் உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.