துபாய்: இனி பஸ்ஸிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. புக் செய்தால் உங்களைத் தேடி வரும்.. RTA துவங்கியுள்ள புதிய பஸ் சர்வீஸ்…!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பிப்ரவரி 1, 2022 முதல் அல் நஹ்தாவில் பேருந்து சேவைக்கான தேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பஸ்-ஆன்-டிமாண்ட் சேவைக்கான புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேருந்து ஓட்டுநர்களின் அதிகரித்து வரும் தேவை மற்றும் விரிவான கள ஆய்வுகளைத் தொடர்ந்து, RTAஇந்த புதிய வழித்தடத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேவை வார நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) காலை 05:00 மணி முதல் நள்ளிரவு வரை இயங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், காலை 05:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01:00 மணி வரை இயங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த சேவையானது காலை 10:00 மணி முதல் மறுநாள் 01:00 மணி வரை செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இதில் பயணிக்க ஒரு நபருக்கு 5 திர்ஹம் மற்றும் அவருடன் கூடுதலாக வரும் நபருக்கு 2 திர்ஹம் கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் துபாய் பஸ்-ஆன்-டிமாண்ட் (Dubai Bus-on- Demand), என்ற அப்ளிகேஷன் மூலம் இதில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்துகள் நெகிழ்வான வழித்தடங்களிலும் நேரங்களிலும் இயக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், அருகிலுள்ள பயணிகளின் இருப்பிடத்தை அறிய ஆப் மூலம் தொடர்பு கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சேவையானது பயணிகளுக்கு பேருந்துகளுக்காக நடந்து செல்லும் தூரம் மற்றும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தையும் குறைத்து, பிரீமியம் பேருந்துகளைப் பயன்படுத்தும் அனுபவத்தை தரும் என கூறப்பட்டுள்ளது.
அளவில் சிறியவையாக இருக்கும் இந்த பேருந்துகள், குறைந்த எரிபொருள் நுகர்வு, குறைந்த கார்பன் உமிழ்வு மற்றும் தனியார் வாகனங்களின் பயணங்களைக் குறைக்க உதவுகிறது.
தற்போது, அல் பர்ஷா, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் அகாடமிக் சிட்டி ஆகிய துபாயின் சில பகுதிகளில் சேவையை இயக்க 13 மினிபஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் வசதியாகவும், பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்றதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.