இந்தியா-அமீரகம் இடையிலான பயணத்தடை ஜூன் 30 வரை நீடிக்கும்..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!!
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவைகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையை ஜூன் 14 தேதி வரை நிறுத்தி வைப்பதாக கடந்த வாரம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது ஜூன் 30 வரை இந்த இடைநிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், “எமிரேட்ஸ் இந்தியாவில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை ஏப்ரல் 24, 2021 முதல் ஜூன் 30, 2021 வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்” என்று விமான நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் இருந்து பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசாங்க அதிகாரிகள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அமீரக அரசின் சார்பாக இம்மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமான சேவைகளுக்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருத்தப்பட்ட வெளியிடப்பட்ட COVID 19 நெறிமுறைகளுக்கு இணங்க ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மட்டும் இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.