கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக திறக்கப்படவுள்ள துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்…!!
கொரோனா பரவலால் இரண்டு வருடங்களாக மூடப்பட்ட துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலைமானது மே மாதத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
துபாய் வேர்ல்ட் சென்ட்ரலானது (DWC), அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இது ஜூன் 2010 இல் திறக்கப்பட்டது மற்றும் துபாயிலிருந்து தென்மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெபல் அலியில் அமைந்துள்ளது. இது முதலில் ஒரு சரக்கு விமான நிலையமாக செயல்படத் தொடங்கியது. பின்னர் பயணிகள் விமான சேவைகள் கடந்த அக்டோபர் 2013 இல் இருந்து இங்கு செயல்படத் தொடங்கியுள்ளன.
துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் இது குறித்து கூறுகையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மறுசீரமைப்புக்காக 45 நாட்களுக்கு மூடப்படும் மற்றும் இந்த நாட்களில் அதன் சில பயணிகள் விமானங்கள் துபாயின் இரண்டாவது மையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தால் (DWC) கையாளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
துபாயின் பிரதான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) டெர்மினல் 3 இல் கான்கோர்ஸ் A இன் இறுதிக் கட்டத்தைத் திறந்த பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து 100 சதவீத திறனுடன் செயல்படத் தொடங்கியது.
DXB 2021 ஆம் ஆண்டில் 29.1 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்திர போக்குவரத்தை எட்டிய பிறகு தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் உலகின் பரபரப்பான விமான நிலையமாகத் தனது நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகளவில் இந்தியர்களே பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.