கொரோனாவிற்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய அமீரகம்..!!
அமீரகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால், பயணம் தொடர்பான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மேலும் தளர்த்தி அமீரகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடாவிட்டாலும், அமீரகத்திற்கு பயணிக்க PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.
தற்பொழுது வரை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விலக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது.
அதே போல் தடுப்பூசி போடப்படாத அமீரக குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16 முதல், தடுப்பூசி போடப்படாத குடிமக்கள் விமானம் புறப்படுவதற்கு இருந்து 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை செய்துகொண்டால் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தடுப்பூசி போடாத குடிமக்கள் வெளிநாடு பயணிக்க தடை இருந்தது.
அமீரகத்தில் தினசரி நோய்த்தொற்று இப்போது 250-க்குக் கீழே பதிவாகி வருகின்றது. இந்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் பதிவான 3,000 க்கும் மேலான தினசரி நோய்த்தொற்றை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சரிவாகும்.
கூடுதலாக, ஐக்கிய அரபு அமீரகமானது கொரோனா வைரஸால் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது. இது உலகளவில் 9 வது இடத்தைப் பிடித்துள்ளது. மார்ச் 8 முதல் அமீரகத்தில் கொரோனா தொடர்பான மரணம் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.