UAE: டிரைவராக இருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்.. புத்தாண்டில் 25 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்…
அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பிக் டிக்கெட் ராஃபிளானது புத்தாண்டின் முதல் மாத ராஃபிளை ஜனவரி 3 ம் தேதி நடத்தியது. இதில் இந்தியரான ஹரிதாசன் மூதாட்டில் வாசன்னி என்பவர் மாபெரும் பரிசுத்தொகையான 25 மில்லியன் திர்ஹம்ஸை வென்றுள்ளார்.
அபுதாபியில் டிரைவராக பணியாற்றி வரும் அவர் பிக் டிக்கெட் வென்றதை பற்றி கூறுகையில், “இது என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. இந்த தொகையானது 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு சமமானது” என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாசன், கடந்த பத்தாண்டுகளாக அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது முசாஃபா தொழில்துறை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
ஓட்டுநராகப் பணிபுரியும் அவரது நண்பரான ஹம்சா குட்டி கூறுகையில், இந்தத் தொகையை 10 பேர் பகிர்ந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹரிதாசன் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி 232976 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், மற்றொரு இந்திய வெளிநாட்டவரான அஸ்வின் அரவிந்தக்ஷன், டிசம்பர் 16 அன்று வாங்கிய 390843 என்ற டிக்கெட்டுடன் 2 மில்லியன் திர்ஹமை இரண்டாம் பரிசாக வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.