அமீரகத்தில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவி வரும் போலி ‘சட்ட அறிவிப்பு’ குறித்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமீரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாட்சப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் குடியிருப்பாளர்களுக்கு, “மன்னிக்கவும். அன்புள்ள வாடிக்கையாளர்களே.. சில பாதுகாப்பு காரணங்களால் உங்கள் வங்கிக் கணக்கு (ATM, Debit, Credit Card) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. உங்கள் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை சரிபார்க்கவும். இல்லையெனில், உங்கள் வங்கிக்கணக்கானது நிரந்தரமாக முடக்கப்படும்” என்ற செய்தி பரவி வருகிறது. மேலும், அந்த செய்தியில் ஒரு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அந்த எண்ணிற்கு வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் போன் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கி மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தங்கள் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை யாருக்கும் வெளியிட வேண்டாம் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.