வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டணம்..!! ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என ஓமான் தொழிலாளர் அமைச்சகம் அறிக்கை.!!
ஓமானி அல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஜூன் 1, 2021 முதல் பணி அனுமதிக்காக (work permit) புதிய கட்டணங்களை ஓமான் அரசு வசூலிக்கும் என ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த புதிய பணி அனுமதி கட்டணமானது, உயர் மற்றும் இடைநிலை தொழில்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புத் தொழில்களில் (technical and specialized profession) பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதிய பணி அனுமதி மற்றும் புதிய வணிகங்களுக்கும் இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனியார் துறையில் உள்ள உயர் மற்றும் இடைநிலை தொழில்களிலும், தொழில்நுட்ப மற்றும் சிறப்புத் தொழில்களிலும், ஓமான் குடிமக்களுக்கு கட்டமைப்போடு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொடர்ந்து “தொழிலாளர் அமைச்சகம் அமைச்சரவை முடிவு எண் (2021/12) என்பதன் கீழ், மேல் மற்றும் இடைநிலை தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புத் தொழில்களுக்கான ஓமனி அல்லாத பணியாளர்களுக்கான வேலை அனுமதிகளுக்கான புதிய கட்டணங்கள், அத்துடன் புதிய பணி அனுமதி மற்றும் புதிய வணிகங்களுக்கான கட்டணங்கள், ஜூன் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய விண்ணப்பங்கள் மற்றும் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவற்றிற்கும் இந்த முடிவு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.