அமீரக செய்திகள்

UAE: கடற்கரைகளில் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!! – பெற்றோர்களை அறிவுறுத்திய அபுதாபி சிவில் பாதுகாப்பு…

அபுதாபி சிவில் பாதுகாப்பு, குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தைகளை கடற்கரைகளில் கண்காணித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவை “Take care of them, so you don’t lose them” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில், ஒரு தந்தை தனது குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆரம்பத்தில் குழந்தைகள் ஒரு பந்துடன் விளையாடுவதையும், மணல் கோட்டைகளை உருவாக்கி மகிழ்ந்து கொண்டிருப்பதையும் காட்டுகிறார்கள்.

அதேவேளையில், அவர்களின் தந்தை கடற்கரையிலேயே ஓய்வெடுத்துப் பார்க்கிறார். அச்சமயம், குழந்தைகள் வெகுதூரம் செல்வதாகத் தெரியவில்லை என்று உணர்ந்த அவர் தூங்குவதற்காக கண்களை மூடுவதையும் வீடியோவில் காணலாம்.

அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவர் பந்தை தண்ணீரில் உதைத்ததும், அதை திருப்பி மீட்டு வருமாறு மற்ற சிறுவர் கேட்கிறார். உடனடியாக, பந்தை எடுத்து வரச் சென்ற சிறுவன் சில வினாடிகளுக்குப் பிறகு, நீரில் மூழ்கி விடுகிறார். அந்த நேரம் அவர்களை அழைத்து வந்த தந்தை உறங்கிக் கொண்டிருந்ததால், மற்றொரு சிறுவன் தந்தையை எழுப்பி விடுகிறார். உறக்கத்தில் இருந்து சட்டென்று விழித்த தந்தை அவசரமாக டயல் செய்து உதவிக்கு அதிகாரிகளை அழைப்பதைக் காணமுடிகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தண்ணீரில் சிக்கித் தவித்த சிறுவனை மீட்டெடுக்கின்றனர். பின்னர் சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கி சுவாசத்தை மீட்டெடுக்கிறார்கள். சிறுவன் சுவாசிக்கத் தொடங்கிய பிறகு ஆம்புலன்ஸில் அவரை அழைத்துச் செல்கிறார்கள்.

இறுதியாக, குழந்தைகளைப் பாதுகாத்துக் கண்காணித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு வீடியோவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!