அபுதாபியின் முதல் இந்து கோயில்..!! விரைவில் அடித்தள பணிகள் நிறைவுறும் என அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அபுதாபியின் முதல் பாரம்பரிய இந்து கோவிலின் அடித்தளப் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையவிருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கான அஸ்திவாரப் பணிகள் அபு முரேகாவில் இறுதிக் கட்டத்தில் நடைபெற்று வருவதாகவும், இந்த கட்டுமானப் பணிகள் தரை மட்டத்திலிருந்து 4.5 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் பாப்ஸ் இந்து மந்திர் அபுதாபியின் (BAPS Hindu Mandir Abu Dhabi) திட்ட பொறியாளர் அசோக் கோண்டெட்டி தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில், “இந்த கோயில் கட்டுமானத் திட்டத்தின் தரம் மற்றும் முன்னேற்றத்தை நான் கண்காணித்து வருகிறேன். இந்த திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். இது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு முறை வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஜனவரி முதல் நாங்கள் சுமார் 4,500 கன மீட்டர் கான்கிரீட் ஊற்றினோம், பின் 3,000 கன மீட்டர் பின் நிரப்புகிறோம். இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்குகளை பதிக்கும் பணி மே மாதம் முதல் தொடங்கும்” என்று கோண்டெட்டி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “இந்த அடித்தளத்தில், எங்களுக்கு இரண்டு சுரங்கங்கள் உள்ளன. சுரங்களில் பொறுத்தப்படுவதற்கு கற்களானது, இந்தியாவில் இருந்து வந்துள்ளன. இப்பணியினை அடுத்த வாரத்திற்குள் தொடங்குவோம். மொத்த அடித்தள பணிகளை ஏப்ரல் இறுதிக்குள் முடிக்க முடியும். எனவே, மே மாதத்தில் கற்களை பதிக்கும் பணியானது தொடங்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டப்பட்டு வரும் கோவிலுக்கான தனித்துவமானா செதுக்கப்பட்ட சிற்பங்கள் இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 2,000 க்கும் மேற்பட்ட சிற்பிகளால் செதுக்கப்பட்டுள்ளது. கையால் செதுக்கப்பட்ட சிற்பம் இந்தியாவின் வளமான கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. இதில் இந்திய காவியங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் பிற கதைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிபி வேர்ல்ட் (DP World) மற்றும் டிரான்ஸ் வேர்ல்ட் குழுமம் (Transworld Group) இந்தியாவில் இருந்து கையால் செதுக்கப்பட்ட கல் வேலை செதுக்கல்களை அனுப்புவதற்கான ஆதரவை வழங்குகின்றன. இந்த கோயில் 2023 இல் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோவிலில் கோயில் வளாகத்தை சுற்றி வரும் நீர் அம்சங்கள், நுழைவுப் படிகளை சுற்றியுள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகள், பார்வையாளர் மையம், பிரார்த்தனை அரங்குகள், நூலகம், வகுப்பறை, சமூக மையம், ஆம்பிதியேட்டர், விளையாட்டு பகுதிகள், தோட்டங்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுக் கடைகள் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.