அமீரக செய்திகள்

UAE : நாளை விண்வெளிக்கு செல்ல தயாராகும் செவ்வாய் கிரகத்திற்கான அரபு நாடுகளின் முதல் விண்கலம் “Hope Probe”

அரபு நாடுகளின் செவ்வாய் கிரகத்திற்கான முதல் விண்வெளித் திட்டமான ஐக்கிய அரபு அமீரகத்தின் “ஹோப் ப்ரோப் (Hope Probe)” நாளை (ஜூலை 20) அதிகாலையில் சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கோளை நோக்கி பயணத்தைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த “ஹோப் ப்ரோப்” விண்கலம், விண்வெளிக்கு சென்று செவ்வாய் கிரகத்தின் முழு வளிமண்டலத்தையும் ஆய்வு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது விண்ணில் ஏவப்பட்டால் உலகளவில் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் நாடுகளில் ஐந்தாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் முதன்முதலில் இத்திட்டத்தை அறிவித்ததிலிருந்து இதுவரையிலும் ஹோப் ப்ரோபில் 200 க்கும் மேற்பட்ட எமிராட்டி பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று (நாளை) ஹோப் ப்ரோபை விண்ணில் ஏவப்படுவதை உறுதி செய்யும் விதமாக எமிரேட்ஸ் மார்ஸ் மிஷனிற்கு (Emirates Mars Mission) தகவல் வந்துள்ளதாகவும் நாளை காலை ஹோப் ப்ரோப் விண்வெளிக்கு செல்லவிருப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஜூலை 15 ம் தேதி அன்று ஹோப் ப்ரோப் விண்ணில் செலுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், விண்கலம் ஏவப்பட இருந்த ஜப்பானின் தனேகாஷிமா (Tanegashima) தீவில் ஏற்பட்ட நிலையற்ற வானிலை காரணமாக முதலில் ஜூலை 17 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு ஜூலை 20 ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது ஹோப் ப்ரோபை விண்வெளியில் கொண்டு செல்லும் H-IIA ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான சாதகமான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக நேரப்படி, நாளை அதிகாலை 1:58 மணிக்கு (1.58 AM) ஹோப் ப்ரோப் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

735 மில்லியன் திர்ஹம் செலவு செய்து ஆறு ஆண்டுகளின் கடின உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு தயாராக தனது நேரக்கணக்கை எண்ணிக்கொண்டிருக்கிறது.

இந்த விண்கலமானது, செவ்வாய் கிரகத்தின் காலநிலையை தெரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இரண்டு வருட காலப்பகுதியில் ஒரு டெராபைட் (terabyte) தரவை திருப்பி அனுப்பும் என்றும் இந்த தரவுகள் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களுக்கு இலவசமாக பகிரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!