இனி முக கவசம் அணிவது கட்டாயமில்லை..!! பொது இடங்களுக்கு நுழைய PCR சோதனை தேவையில்லை..!! அறிவிப்பை வெளியிட்ட கத்தார்..!!
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 21 முதல் பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி போடாதவர்களிடமிருந்து எதிர்மறையான PCR சோதனை இனி தேவையில்லை என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களும் இனி தங்கள் அலுவலகங்களுக்குள் நுழைய PCR பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போடப்படாத அல்லது நோயெதிர்ப்பு சக்தி இல்லாத நபர்கள் பொது இடங்களுக்கு நுழைவதற்கு எதிர்மறையான PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது.
அதே போல் மூடிய பொதுப் பகுதிகளுக்குள் நுழையும் போது தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு நிலையைச் சரிபார்ப்பது இனி மேற்கொள்ளப்படாது என்றும் இருப்பினும், பொது உட்புறப் பகுதிகளுக்குள் நுழைவதற்கு Ehteraz கிரீன் ஸ்டேடஸ் இன்னும் தேவைப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார மையங்களில் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் பொது போக்குவரத்தில் உள்ளவர்கள் தவிர முக கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்று பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கேஷியர், ரிசப்ஷனிஸ்ட் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் முக கவசங்களை தொடர்ந்து அணிய வேண்டும். மேலும் எளிதில் பாதிப்புக்குள்ளாகுபவர்கள், நாள்பட்ட நோயுடையவர்கள், கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்தால் அல்லது அறிகுறிகள் இருப்பதாகத் தோன்றுபவர்கள் மற்றும் நெரிசலான அல்லது காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருந்தால், உட்புறப் பகுதிகளில் முக்கவசங்களை அணிந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு பொது சுகாதார அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற தேவகயில்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிப்பதை மதிப்பிடுவதற்கு, நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளின் ஆய்வுகளை மேற்கொள்ள, சுகாதார அமைச்சகம் உள்துறை அமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மே 22 முதல், சமூக ஊடகங்களில் கொரோனா தரவை தினசரி வெளியிடுவதை அமைச்சகம் நிறுத்தி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியிடும் வகையில் மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீக்குவது சமீபத்திய வாரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.