வளைகுடா செய்திகள்

விசிட் விசா வைத்திருப்போரின் செல்லுபடி காலத்தை இலவசமாக நீட்டித்த சவூதி அரேபியா..!!

சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசிட் விசாவின் செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விசா நீட்டிப்பிற்கு எந்த கட்டணமும் வசூலிக்காமல் தானாகவே செய்யப்படும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இந்தியா உட்பட குறிப்பிட்ட நாடுகளிலிருந்து சவூதி அரேபியாவுக்கு நேரடியாக பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் காலத்தில் காலாவதியான விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த விசா நீட்டிப்பு பொருந்தும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின் படி, இந்த நடவடிக்கை சவுதி அரசாங்கம் கொரோனாவிற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (JAWAZAT) நாட்டிற்கு வெளியே இருக்கும் வெளிநாட்டினரின் இகாமாவின் (ரெசிடென்ஸ் அனுமதி) செல்லுபடியை நீட்டிப்பதாக அறிவித்தது. அத்துடன் எக்ஸிட் அண்ட் ரீஎன்ட்ரி விசாக்கள் மற்றும் விசிட் விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை எந்த கட்டணமும் இல்லாமல் தானாகவே ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்தது.

இந்த நீட்டிப்பானது, பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது வரை, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா பயணத் தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!