இந்திய செய்திகள்

கொரோனா எதிரொலி : இந்தியாவில் 8 நாடுகளுக்கு விசா மறுப்பு!!!

உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு, இந்தியாவில் மேலும் 10 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 60 ஐ கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இத்தாலியர்கள் ஆவர்.

இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்புகளில் பெரும்பாலானவை கேரளாவில் இருப்பதால், கேரளா மாநிலத்தில் கொரோனாவையொட்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மார்ச் 31 ம் தேதி வரை கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என கேரள அரசு நேற்று தெரிவித்திருந்தது. மேலும், 7 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டு கோடை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஜம்மு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் லடாக்கில் இரு நபர்களும் கர்நாடகாவில் 4 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும்,கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய சுகாதார ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதால், ஏற்கெனவே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளான சீனா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது கூடுதலாக, 3 நாடுகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளுக்கும் விசா தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!