அமீரக செய்திகள்

UAE: PCR சோதனைக்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்த அபுதாபி..!! அனைத்து மருத்துவ மையங்களிலும் இன்று முதல் அமல்..!!

அபுதாபி அரசானது கொரோனாவிற்காக மேற்கொள்ளப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி இனி குடியிருப்பாளர்கள் அபுதாபியில்  PCR சோதனை மேற்கொள்ள வெறும் 40 திர்ஹம் செலுத்தினாலே போதும். அபுதாபியின் இந்த முடிவானது எமிரேட்டில் உள்ள அனைத்து மருத்துவமையங்களிலும் இன்று (மார்ச் 1) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சில குடியிருப்பாளர்களுக்கு இலவச பரிசோதனை வசதியுடன், அபுதாபியில் PCR பரிசோதனையைப் பெறுவதற்கான விலை 50 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டது. தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அபுதாபியில் குடியிருப்போர், அரசு ஊழியர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான பல கொரோனா விதிமுறைகளை புதுப்பித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விலைக் குறைப்பு வந்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் படி, பிப்ரவரி 28 முதல் அபுதாபிக்குள் நுழைய அல் ஹோஸ்ன் கிரீன் பாஸ் தேவையில்லை என்று அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.

அதேபோல் கோவிட்-19 அறிகுறிகளுக்காக பயணிகளை பரிசோதிக்கும் EDE ஸ்கேனர்களும் சோதனைச் சாவடிகளில் இருந்து அகற்றப்படும் என்றும் அபுதாபி அரசு ஊடக அலுவலகம் கூறியிருந்தது. இருப்பினும், அபுதாபியில் உள்ள பொது இடங்களை அணுகுவதற்கு கிரீன் பாஸ் அமைப்பு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் புதிய வழிகாட்டுதல்களின்படி, வெளிப்புற இடங்களில் முக கவசங்களை அணிவது அவரவரின் விருப்பமானது என்றும், ஆனால் உட்புற இடங்களில் முக கவங்களை அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சமூக இடைவெளியையும் குடியிருப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.  இந்த புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பிப்ரவரி 26 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!