உக்ரைன் அதிபருடன் உரையாடிய அபுதாபி இளவரசர்..!! பிரச்சனைக்கு அமைதியான தீர்வை காண வலியுறுத்தல்..!!
அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். உக்ரைனில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக உலகத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் கட்டமைப்பிற்குள் இரு தலைவர்களும் பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர்.
இதில், ஜெலென்ஸ்கி உக்ரைனின் சமீபத்திய நிலவரங்கள் குறித்து விளக்கியுள்ளார். அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை, உரையாடல் மற்றும் புரிந்துணர்வின் மூலம் அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை ஷேக் முகம்மது அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் இந்த ரஷ்ய- உக்ரைன் நெருக்கடியின் அமைதியான தீர்வை நோக்கமாகக் கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரிக்கிறது என்றும், உக்ரைனில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதன் நீண்டகால மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் உதவிகளை வழங்க ஆர்வமாக இருப்பதாகவும் ஷேக் முகமது கூறியுள்ளார்.
அத்துடன் அனைத்து தரப்பினரின் நலன்களையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தை ஷேக் முகமது வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னராக ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியபோதும் இந்த மோதலில் அமைதியான தீர்வைக் காண ஷேக் முகம்மது அவர்கள் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.