UAE: காரில் சிக்கிய சிறுமி உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!!
ராஸ் அல் கைமாவில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) ஈத் அல் பித்ர் பண்டிகை அன்று தனது குடும்பத்தினரின் காரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக் கொண்ட மூன்று வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, காரின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், காருக்குள் இருக்கும் ஏர் கண்டிஷனர் வேலை செய்யவில்லை. எனவே, காரில் சிக்கிக் கொண்டிந்த சிறுமி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகு, காருக்குள் சிறுமி மாட்டிக் கொண்டதைக் கண்டுபிடித்த அவரது குடும்பத்தினர் காரில் இருந்து சிறுமியை மீட்டு, உடனடியாக ராஸ் அல் கைமாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளித்துள்ளனர். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
மேலும், காரில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததில் இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால் சில மணி நேரங்களில் அவரது உடல்நிலை சரியானதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை தடுப்பதற்கு அமீரக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் காரில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.